Tuesday, August 5, 2014

பனிவரகு... செந்தினை... சிட்டஞ்சாமை...
பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கும் மலை விவசாயிகள்!
காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி
பாரம்பரியம்
'தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற கலியன் பூங்குன்றனாரின் வரிகள், நமது சாப்பாட்டு முறைக்கும்... இதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் சரியாகப் பொருந்தும். பாரம்பரிய உணவில் இருந்து 'ஃபாஸ்ட் ஃபுட்’ கலாசாரத்துக்கு மாறியதன் விளைவு, நோய்களின் கூடாரமாக மாறிவிட்டது நம் உடல். அரிசிச் சோறு சாப்பிடுவதுதான் கௌரவம் என்ற நினைப்பில், சத்துக்களின் சங்கமமான சிறுதானியங்களை உதாசீனப்படுத்திய நாம்... கௌரவம் பெரிதா... உயிர் பெரிதா? என்கிற நிலை வந்த பிறகு, மீண்டும் சிறுதானியங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஐந்து நட்சத்திர விடுதிகளில்கூட, சாமைச் சோறு, கம்பங்கூழ், கேழ்வரகு தோசை சாப்பிட வரிசையில் நிற்கிறது, ஒரு கூட்டம். இதனால், சிறுதானியத் தேடல் அதிகமாகியிருக்கிறது.
சமவெளிகளில் அவ்வளவாக காணமுடியாத இந்த சிறுதானியங்களை, மலை மக்கள் மட்டுமே இன்றளவும் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஜவ்வாது மலை கிராமங்களில் இன்றைக்கும் சிறுதானிய சாகுபடி கொடிகட்டிப் பறக்கிறது. பல்கலைக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட ரகங்கள் புழக்கத்தில் இருந்தாலும், பாரம்பரிய விதைகளை தங்கள் சொத்தாகப் பாவித்து, பாதுகாக்கின்றனர் ஜவ்வாது மலை கிராம விவசாயிகள்!
70 நாளில் விளையும் கருஞ்சுருட்டைக் கேழ்வரகு!
பாரம்பரிய கேழ்வரகு ரகத்தை சாகுபடி செய்வது பற்றி நம்மிடம் பேசிய ஏர்நெல்லிமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா, ''அப்பா காலத்துல சாமை, பனிவரகு, கேழ்வரகு, சோளம்னு மானாவாரியா விதைச்சு விடுவோம். ஆடு, மாடுகளும் அதிகமா இருந்துச்சு. இப்ப அவ்வளவா இல்லை. என்கிட்ட ஒரு ஜோடி உழவு மாடு மட்டும்தான் நிக்குது. மூணரை ஏக்கர்ல விவசாயம் பாக்குறேன். நெல், மக்காசோளம்னு சாகுபடி செஞ்சாலும்... சாமை, கேழ்வரகு, கம்பு சாகுபடியை கைவிடல. ஆவணிப் பட்டத்துல சிட்டஞ்சாமை விதைப்போம். ஆடி மாச முதல் வாரத்துல கருஞ்சுருட்டைக் கேழ்வரகு, வெள்ளைச் சுருட்டைக் கேழ்வரகு ரகங்களை விதைப்போம். தண்ணி வசதி இருக்கிறவங்க வைகாசிப் பட்டத்துலயே விதைச்சுடுவாங்க. இந்த வருஷம் வைகாசிப் பட்டத்துல 3 படி விதைப்பாடு உள்ள நிலத்துல (ஒரு படி விதைப்பாடு என்பது சுமார் 10 சென்ட்) கருஞ்சுருட்டைக் கேழ்வரகு விதைச்சிருக்கேன்.
கருஞ்சுருட்டைக் கேழ்வரகோட வயசு 70 நாட்கள். வெள்ளைச் சுருட்டைக் கேழ்வரகோட வயது 135 நாட்கள். இரண்டுக்கும் சாகுபடி முறை ஒண்ணுதான். நாத்துப் பாவிதான் நடவு செய்றேன். எரு கொட்டி உழுது, விதைச்சுடலாம். களை முளைச்சா, எடுத்து விடுறது... தண்ணி பாய்ச்சுறது... இது ரெண்டுதான் வேலை. உரம், பூச்சிக்கொல்லி எதுவும் தேவையில்லை. அடுத்து அறுவடைதான்.
3 படி விதைப்பாடு உள்ள நிலத்துல (30 சென்ட்), 1,200 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோ கேழ்வரகு 20 ரூபாய்னு விற்பனையாகுது. இதுல 24 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். இதோட தட்டை, மாடுகளுக்குத் தீவனமா பயன்படும். இதை 5 ஆயிரம் ரூபாய்க்கு வித்துடுவேன். மொத்தம் 29 ஆயிரம் ரூபாய் வருமானம். எல்லா செலவும் போக, 20 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்'' என்றார்.
குளிருக்கு ஏற்ற செந்தினை!
பக்கத்து கிராமமான மேல்நெல்லிமரத்தூர் கிராமத்தில் செந்தினை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், கோவிந்தராஜ். இவரிடம் பேசியபோது, ''அப்பா காலத்துல கமலையில தண்ணீர் இறைச்சு, கொஞ்சமா வீட்டுத் தேவைக்கு மட்டும் நெல் போட்டுக்குவோம். மீதி நிலத்துல மானாவாரி விவசாயம்தான். நான் விவசாயத்துக்கு வந்த பிறகு, ஆயில் மோட்டார் போட்டேன். இப்ப கரன்ட் மோட்டாருக்கு மாறின பிறகு, நெல், மல்பெரி, கெர்கின்ஸ் வெள்ளரினு சாகுபடியை மாத்திக்கிட்டு, பட்டுப்புழு வளர்ப்புலயும் இறங்கினேன். இந்த சமயத்துல உடம்பு கொஞ்சம் கெட்டுப்போய் டாக்டர்கிட்ட காட்டினப்போ... 'சாப்பாட்டாலதான் உங்க உடம்புல பிரச்னை’னு சொன்னார். அதனாலதான், திரும்பவும் நம்மோட பாரம்பரிய சாமை, கேழ்வரகு, தினை மாதிரியான தானியங்களைச் சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்.
சாமை, கேழ்வரகு, தினை மூணையும் நானே சாகுபடி பண்றேன். 6 ஏக்கர் 80 சென்ட் நிலம் இருக்கு. 3 ஏக்கர்ல மா இருக்கு. இதுக்கு ஊடுபயிரா சாமை இருக்கு. 2 ஏக்கர்ல நெல் இருக்கு. 1 ஏக்கர்ல கெர்கின்ஸ் இருக்கு. 30 சென்ட்ல கேழ்வரகு, 25 சென்ட்ல சாமை செந்தினை போட்டிருக்கேன். 25 சென்ட்ல வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை சாகுபடி செய்றேன். இந்திய வேளாண் அறிவியல் மையத்திலிருந்து சீரகச்சம்பா, மடுமுழுங்கி, வரப்புக்குடைஞ்சான் நெல் ரகங்களோட விதை கொடுத்தாங்க. போன வருஷம் சீரகச்சம்பா சாகுபடி செஞ்சதுல நல்ல விளைச்சல்.
செந்தினையை ஆவணியில விதைக்கலாம். 110 நாள்ல அறுவடைக்கு வந்துடும். 10 சென்ட்ல 350 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோ 20 ரூபாய்னு விற்பனையாகுது. செந்தினை அரிசியில மாவு இடிச்சு சாமிக்கு படைப்பாங்க. இது கொஞ்சம் சூட்டைக் கிளப்பற தானியம்கிறதால, குளிர்காலத்துல கஞ்சி வெச்சுக் குடிப்போம்'' என்றார்.
60 நாளில் விளையும் பனிவரகு!
சேராமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி, பனிவரகு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். ''மூணரை ஏக்கர்ல விவசாயம் இருக்கு. ஒவ்வொரு வருஷமும் மானாவாரியா, சாமை, கேழ்வரகு, பனிவரகு மூணையும் சாகுபடி செய்றேன். 60 நாள்ல பனிவரகு விளைஞ்சுடும். வைகாசிப் பட்டத்துல விதைச்சுவிட்டா... கிடைக்கிற மழையில தானே விளைஞ்சு வந்துடும். பெருசா பராமரிக்கத் தேவையில்ல. ஆடியில அறுவடை செஞ்சுட்டு, சாமையை விதைக்கலாம். இப்போ மழை குறைவா இருக்கிறதால, ரெண்டு வருஷமா பனிவரகையும் ஆடிப்பட்டத்துலதான் விதைக்கிறேன். இந்த வருஷம் வீட்டுத் தேவைக்காக மட்டும் 5 சென்ட் நிலத்துல பனிவரகு விதைச்சிருக்கேன். இதை அறுத்து அடிச்சா... 80 கிலோ வரை கிடைக்கும். இதை அடை செஞ்சு சாப்பிடுவோம்'' என்றார்.  
ஆனி விதைப்பு... ஆடி முளைப்பு!
ஜவ்வாது மலை விவசாயிகளுக்கு பலவிதமான பாரம்பரிய விதைகளை வழங்கி வருகிறது, இங்கு செயல்பட்டுவரும் இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையத்தின் கிளை. இதன் திட்ட அலுவலர் ராகுலிடம் பேசியபோது, ''ஜவ்வாது மலையில் இருக்கும் விவசாயிகள் 90 சதவிகிதம் சாமையைத்தான் சாகுபடி செய்கிறார் கள். சாமையில்... சிட்டஞ்சாமை 3 மாதப்பயிர். பெருஞ்சாமை (வெள்ளைச்சாமை) 6 மாதப்பயிர். சிட்டஞ்சாமைக்கு 'ஆனி விதைப்பு, ஆடி முளைப்பு’ என்று சொல்வார்கள். பருவ மாறுபாடுகளால் சிட்டஞ்சாமையை விதைக்க முடியாமல் போனால், புரட்டாசி மாதத்தில் பெருஞ்சாமையை விதைப்பார்கள்.
பனி வரகை வைகாசி மாதத்தில் கிடைக்கும் மழையைப் பொறுத்து விதைப்பார்கள். அந்த ஈரப் பதத்திலேயே அது வளர்ந்து 2 மாதங்களில் மகசூல் கொடுத்துவிடும். தினையில் பலவகையான பாரம்பரிய ரகங்கள் இருக்கின்றன. அதில் செந்தினையும் ஒன்று. இது அழியும் நிலையில் இருக்கிறது. ஒரு விவசாயியிடம் இருந்த செந்தினை விதைகளை வாங்கி, சில விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிறோம்'' என்ற ராகுல்,
''இந்தப் பகுதியில் விவசாயிகளை ஒருங்கிணைத்து 'வேளாண் வழிகாட்டி மையம்’ ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இந்த மையம் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான விதைகளைக் கொடுத்து வருகிறோம். ஒரு பங்கு விதை கொடுத்தால்... இரண்டு பங்காகத் திருப்பி கொடுக்க வேண்டும். வெளியூர் விவசாயிகளாக இருந்தால், ஒரு கிலோ விதை 30 ரூபாய் என்று விற்பனை செய் கிறோம். தற்போது, எங்கள் மையத்தில் சாமையில் இரண்டு ரகங்கள், தினையில் ஏழு ரகங்கள், கேழ்வரகில் மூன்று ரகங்கள், பனிவரகில் ஒரு ரகம், குதிரைவாலியில் ஒரு ரகம், வரகில் ஒரு ரகம் என விதைகள் இருப்பு வைத்துள்ளோம். தேவைப்படும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்'' என்றார்.
தொடர்புக்கு, 

கிருஷ்ணா செல்போன்: 97876-43683.
கோவிந்தராஜ், செல்போன்: 97863-72403.
ராகுல், செல்போன்: 99427-96314.

Friday, February 8, 2013

பராமரிப்புச் செலவுக்கு... தென்னை, வாழை...

பசுமை விகடனில் வந்தது..
பராமரிப்புச் செலவுக்கு... தென்னை, வாழை...  

'ஒரு பயிரை மட்டும் நம்பி இருக்காமல், பல பயிர்களை சாகுபடி செய்தால்தான் விவசாயத்தில் வெற்றி பெற முடியும்’
- பல ஆண்டுகளாக விவசாய வல்லுநர்கள் பலரும் கூறி வரும் வித்தை இது. இப்படி வெற்றி பெற்றுக் கொண்டிருப்பவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபாலும் ஒருவர்.
சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி செல்லும் சாலையில் ஏழாவது கிலோ மீட்டரில் வருகிறது, நரையன் குடியிருப்பு. அதன் அருகிலுள்ள கருவேலம்பாடு கிராமத்தில்தான் ஜெயபாலின் பண்ணை இருக்கிறது. ரம்மியமான சூழலில், செடிமுருங்கை, தென்னை, வாழை, மா, எலுமிச்சை, கொய்யா, நெல்லி, சப்போட்டா... என மகசூலை வாரி குவிக்கும் மரங்கள் சூழ அத்தனை அழகாகக் காட்சியளிக்கிறது, பத்து ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் அந்தப் பண்ணை.
பாடம் சொன்ன பசுமை விகடன்!
''நான், என் மனைவி ரெண்டு பேருமே ஆசிரியர்கள்தான். நான் இப்போ ரிட்டையர்டு ஆயிட்டேன். பூர்விக தொழிலே விவசாயம்தான். முப்பது வருசத்துக்கு முன்ன இந்தத் தோட்டத்தை வாங்கிப் போட்டேன். இந்த பத்து ஏக்கர் போக, தனியா இருபது ஏக்கர்ல மரப்பயிர்களை சாகுபடி பண்றேன். ஆரம்பத்துல விவசாயத்துல சொல்லிக்கற மாதிரி வருமானம் இல்ல. ஆனாலும், விவசாயத்து மேல இருந்த ஈர்ப்பால அதை விடறதுக்கு மனசும் வரல.
விவசாயம் சம்பந்தமான புத்தகங்களை நிறைய படிப்பேன். மூணு வருசத்துக்கு முன்ன, பஸ்ல போறப்போ, தற்செயலா 'பசுமை விகடன்’ என் கண்ணில் பட்டுச்சு. புத்தகத்தைப் படிச்ச உடனேயே ஒரு நம்பிக்கை பிறந்துடுச்சு. வீட்டுக்குப் போனதுமே பசங்களைக் கூப்பிட்டு 'மக்கா... நாம இத்தனை வருசமா ரசாயன உரத்தையும், பூச்சிக்கொல்லியையும் மண்ணுல கொட்டி இந்த மண்ணை மலடாக்கிட்டோம்டே. இனி இயற்கைக்கு மாறலாம்னு இருக்கேன்’னு என் விருப்பத்தைச் சொன்னதும், மொத்த குடும்பமும் உற்சாகமாகிடுச்சு. பள்ளிக்கூடத்தில் நான் ஆயிரமாயிரம் குழந்தைகளுக்குப் பாடம் எடுத்துருக்கேன். ஆனா... எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குற ஆசான், 'பசுமை விகடன்’தான்'' என்று நெகிழ்ச்சியான முன்னுரை கொடுத்த ஜெயபால், பண்ணையைச் சுற்றிக் காட்டியபடியே பேசினார்.
செடிமுருங்கையில் ஆண்டுக்கு 3 லட்சம்!
''பத்து ஏக்கர்ல 1,000 செடிமுருங்கை, 450 தென்னை, 300 வாழை, 6 மாமரம், 10 நெல்லி, 5 எலுமிச்சை, 7 கொய்யா, 20 சப்போட்டா நிக்குது. அரை ஏக்கர்ல தென்னைக்கு ஊடுபயிரா நிலக்கடலை சாகுபடி பண்றேன். மூணு வருசத்துக்கு முன்ன 'பசுமை விகடன்’ கொடுத்த தைரியத்துலதான் இயற்கைப் பக்கம் திரும்பினேன். விவசாயத்துல எந்த சந்தேகம் வந்தாலும், உடனே பசுமை விகடனை எடுத்துப் பார்த்துக்கிடுவேன். போன வருசம் செடிமுருங்கையில 60 டன் வரைக்கும் மகசூல் கிடைச்சுது. வேலையாட்கள் கூலி, முருங்கை பராமரிப்புச் செலவுகள் எல்லாத்தையும் தென்னை, வாழையில இருந்து கிடைக்கிற வருமானத்துலயே ஈடுகட்டிடலாம். செடி முருங்கையில கிடைக்கற வருமானம் முழுக்க லாபம்தான். வருஷத்துக்கு மூணு லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்குது.
தென்னைக்குக் குறைவான பராமரிப்புதான்!
மூணு வயசுல இருந்து 30 வயசு வரைக்கும் மொத்தம் 450 தென்னை மரங்கள் நிக்குது. ஆறு மாசத்துக்கு ஒரு முறை தொழுவுரம் கொடுப்பேன். கூண்வண்டு தாக்காம இருக்கறதுக்காக புகையிலைச் சாறு, வசம்புத் தைலம் ரெண்டையும் கலந்து தெளிப்பேன். அவ்வளவுதான் பராமரிப்பு. 40 நாளைக்கு ஒரு முறை காய் பறிப்பேன். ஒவ்வொரு பறிப்புலயும் 3 ஆயிரம் காய் வரைக்கும் மகசூல் கிடைக்குது. 
வாட்டி எடுத்த வறட்சி... தாக்குப் பிடித்த இயற்கை!
வாழையில, செவ்வாழை, கோழிக்கோடு, கற்பூரவல்லி, நாட்டு ரகம்னு கலந்து வெச்சிருக்கேன். என் நண்பர் ஒருத்தர்கிட்ட இருந்து விதைக்கிழங்கை வாங்கிக்கிட்டேன். சுண்ணாம்புக் கரைசல்ல விதைக்கிழங்கை முக்கித்தான் நடவு செய்வேன். நடவுக்குழிக்குள்ள ஒரு கையளவு வேப்பம் பிண்ணாக்கையும் போட்டுடறதால ஆரோக்கியமா வாழை வளருது. ஆறடி இடைவெளி கொடுத்துதான் வாழை நட்டிருக்கேன். கரன்ட் பிரச்னையால வாழைக்கு சரிவர தண்ணீர் பாய்ச்ச முடியல. ஆனாலும், ஓரளவு மகசூல் வந்திருக்குனா அதுக்கு இயற்கை விவசாயம்தான் காரணம்'' என்று இயற்கையை ஆராதித்த ஜெயபால், நிறைவாக நிலக்கடலை வயலுக்கு அழைத்துச் சென்றார்.
ஆரோக்கியத்தைக் கூட்டும் நிலக்கடலை!
''என் தோட்டம் முழுக்க செம்மண் பூமிதான். அதனாலதான் நாட்டு ரக நிலக்கடலை போட்டிருக்கேன். மெஷின் மூலமாத்தான் கடலையை நடவு செய்வேன். மண்புழு உரம், அசோஸ்பைரில்லம் ரெண்டும்தான் ஊட்டத்துக்கு. தேவைப்பட்டா... பூச்சிவிரட்டிகளை தெளிப்பேன். அறுவடை செஞ்சு காய வெச்சா, அரை ஏக்கர்ல 10 மூட்டை
(37 கிலோ மூட்டை) வரைக்கும் கடலை கிடைக்கும். நான் நிலக்கடலையை வெளியில் விக்குறது இல்லை. சொந்த பந்தங்களுக்கு கொடுக்கறதுக்கே சரியா இருக்கும். சந்தோஷத்தோட அவங்களுக்கெல்லாம் கொடுத்துடுவேன்'' என்று குஷி பொங்கச் சொன்னார் ஜெயபால்! 

தொடர்புக்கு, ஜெயபால், செல்போன்: 94421-61417.

இப்படித்தான் சாகுபடி செய்யணும் செடிமுருங்கையை !
ஜெயபால் சொல்லும் செடிமுருங்கை சாகுபடி இதுதான்- 'டிசம்பர், ஜனவரி மாதங்கள் செடிமுருங்கை நடவுக்கு ஏற்றவை. நான்கு அடி நீளமுள்ள விதைக்குச்சியை, அரை அடி வரை மண்ணில் புதையுமாறு பதியம் போடவேண்டும். இவற்றில், எட்டு நாட்களுக்குப் பிறகு நன்றாகத் தழைத்து வரும் விதைக்குச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடவு செய்ய வேண்டும். 2 கன அடி அளவுக்குக் குழிபறித்து, ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கை இட்டு தேர்ந்தெடுத்த விதைக்குச்சிகளை குழியின் நடுப்பகுதியில் வைத்து, மண்ணால் மூட வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால் அதிக மகசூல் கிடைக்கும். ஒரு முறை நடவு செய்தால்... 5 வருடங்கள் வரை பலன் கிடைக்கும். மரங்களின் வேர்ப்பகுதியில் பூச்சி, புழுத் தாக்குதல் இருந்தால்... அந்த மரங்களை  அப்புறப்படுத்திவிட வேண்டும்.
நடவு செய்த இரண்டாவது மாதத்தில், ஒவ்வொரு மரத்தின் இரண்டு பக்கங்களிலும், முக்கால் அடி ஆழத்துக்குக் குழிபறித்து, ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ மட்கிய கோழி எருவை வைக்க வேண்டும். நான்காவது மாதத்தில் இதேபோல் குழிபறித்து, ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ மாட்டுச் சாணம், அரை கிலோ வேப்பம் பிண்ணாக்குக் கலவையை இடவேண்டும். பூச்சிகளைக் கட்டுப்படுத்த பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பூண்டுக் கரைசல், வசம்புத் தைலம் தெளிக்கவேண்டும். செடிமுருங்கையில் சில பூச்சிகளின் தாக்குதல் காரணமாக, இலைகள் மஞ்சள் நிறத்துக்கு மாறி, பிசின் பிடிக்கும். இதை வசம்புத் தைலம் கட்டுப்படுத்தி விடும்.   
நான்காவது மாத இறுதியில் செடிமுருங்கையில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். முதல் பூ பூத்தவுடன் உதிர்ந்துவிடும். அடுத்த பூ நன்றாக பிடிப்பதற்காக, அரை கிலோ பெருங்காயம், சிறிது காதி சோப் ஆகியவற்றை 5 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டிய கரைசலை, மரத்தின் மேல் பகுதியில் தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில், இருபது மில்லி பெருங்காயக் கரைசல் வீதம் கலந்தால்... இரண்டு மரங்களுக்கு அடிக்க முடியும். இதைக் கணக்கிட்டு தேவைக்கு ஏற்ப தயாரித்துக் கொள்ள வேண்டும்.
ஐந்தாவது மாதத்தில் மரங்கள் காய்ப்புக்கு வரும். மாதம் இரண்டு அறுவடை வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து அறுவடை செய்யலாம். 1,000 செடிமுருங்கை இருந்தால், ஒரு பறிப்புக்கு 5 டன் வரை முருங்கைக்காய்கள் கிடைக்கும். டிசம்பர் மாதத்தில், இலையெல்லாம் உதிர்ந்து மொட்டையாகிவிடும். அந்த நேரத்தில் மரத்தின் அடிப்பகுதியை மட்டும் விட்டுவிட்டு, மற்ற பகுதிகளை முற்றிலுமாக வெட்டி... தோட்டத்தில் ஆங்காங்கே 5 அடி ஆழம்,
5 அடி அகலத்தில் குழிபறித்து, அதனுள் போட்டு மூடிவிட வேண்டும். இவை மட்கி உரமாகி, அடுத்த போகத்தில் நல்ல மகசூலைக் கொடுக்க உதவியாக இருக்கும்'' என்றார்.
வசம்புத் தைலம் !
அரை கிலோ வசம்பு, அரை கிலோ வெள்ளைப் புகையிலை ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தனித்தனியாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பிறகு, இரண்டையும் ஆட்டுக்கல்லில் (கிரைண்டர்) போட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். இந்தச் சாறுடன் ஒரு லிட்டர் பசு மாட்டுச் சிறுநீரைச் சேர்த்தால்... வசம்புத் தைலம் தயார். இதை ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம்.  பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வசம்புத் தைலம் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம். 
பூண்டுக் கரைசல் !
வெள்ளைப் பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி தலா ஒரு கிலோ எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு லிட்டர் மண்ணெண்ணெயைச் சேர்த்து இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, ஆட்டுக்கல்லில் (கிரைண்டர்) அரைத்து வடிகட்டி எடுத்தால்... பூண்டுக் கரைசல் தயார். இதை ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம்.  பத்து லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி பூண்டுக் கரைசல் என்ற விகிதத்தில் இதைப் பயன்படுத்தலாம்.