பனிவரகு... செந்தினை... சிட்டஞ்சாமை...
பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கும் மலை விவசாயிகள்!
காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி
பாரம்பரியம்
'தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற கலியன் பூங்குன்றனாரின் வரிகள், நமது சாப்பாட்டு முறைக்கும்... இதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் சரியாகப் பொருந்தும். பாரம்பரிய உணவில் இருந்து 'ஃபாஸ்ட் ஃபுட்’ கலாசாரத்துக்கு மாறியதன் விளைவு, நோய்களின் கூடாரமாக மாறிவிட்டது நம் உடல். அரிசிச் சோறு சாப்பிடுவதுதான் கௌரவம் என்ற நினைப்பில், சத்துக்களின் சங்கமமான சிறுதானியங்களை உதாசீனப்படுத்திய நாம்... கௌரவம் பெரிதா... உயிர் பெரிதா? என்கிற நிலை வந்த பிறகு, மீண்டும் சிறுதானியங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஐந்து நட்சத்திர விடுதிகளில்கூட, சாமைச் சோறு, கம்பங்கூழ், கேழ்வரகு தோசை சாப்பிட வரிசையில் நிற்கிறது, ஒரு கூட்டம். இதனால், சிறுதானியத் தேடல் அதிகமாகியிருக்கிறது.
சமவெளிகளில் அவ்வளவாக காணமுடியாத இந்த சிறுதானியங்களை, மலை மக்கள் மட்டுமே இன்றளவும் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஜவ்வாது மலை கிராமங்களில் இன்றைக்கும் சிறுதானிய சாகுபடி கொடிகட்டிப் பறக்கிறது. பல்கலைக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட ரகங்கள் புழக்கத்தில் இருந்தாலும், பாரம்பரிய விதைகளை தங்கள் சொத்தாகப் பாவித்து, பாதுகாக்கின்றனர் ஜவ்வாது மலை கிராம விவசாயிகள்!
70 நாளில் விளையும் கருஞ்சுருட்டைக் கேழ்வரகு!
பாரம்பரிய கேழ்வரகு ரகத்தை சாகுபடி செய்வது பற்றி நம்மிடம் பேசிய ஏர்நெல்லிமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா, ''அப்பா காலத்துல சாமை, பனிவரகு, கேழ்வரகு, சோளம்னு மானாவாரியா விதைச்சு விடுவோம். ஆடு, மாடுகளும் அதிகமா இருந்துச்சு. இப்ப அவ்வளவா இல்லை. என்கிட்ட ஒரு ஜோடி உழவு மாடு மட்டும்தான் நிக்குது. மூணரை ஏக்கர்ல விவசாயம் பாக்குறேன். நெல், மக்காசோளம்னு சாகுபடி செஞ்சாலும்... சாமை, கேழ்வரகு, கம்பு சாகுபடியை கைவிடல. ஆவணிப் பட்டத்துல சிட்டஞ்சாமை விதைப்போம். ஆடி மாச முதல் வாரத்துல கருஞ்சுருட்டைக் கேழ்வரகு, வெள்ளைச் சுருட்டைக் கேழ்வரகு ரகங்களை விதைப்போம். தண்ணி வசதி இருக்கிறவங்க வைகாசிப் பட்டத்துலயே விதைச்சுடுவாங்க. இந்த வருஷம் வைகாசிப் பட்டத்துல 3 படி விதைப்பாடு உள்ள நிலத்துல (ஒரு படி விதைப்பாடு என்பது சுமார் 10 சென்ட்) கருஞ்சுருட்டைக் கேழ்வரகு விதைச்சிருக்கேன்.
கருஞ்சுருட்டைக் கேழ்வரகோட வயசு 70 நாட்கள். வெள்ளைச் சுருட்டைக் கேழ்வரகோட வயது 135 நாட்கள். இரண்டுக்கும் சாகுபடி முறை ஒண்ணுதான். நாத்துப் பாவிதான் நடவு செய்றேன். எரு கொட்டி உழுது, விதைச்சுடலாம். களை முளைச்சா, எடுத்து விடுறது... தண்ணி பாய்ச்சுறது... இது ரெண்டுதான் வேலை. உரம், பூச்சிக்கொல்லி எதுவும் தேவையில்லை. அடுத்து அறுவடைதான்.
3 படி விதைப்பாடு உள்ள நிலத்துல (30 சென்ட்), 1,200 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோ கேழ்வரகு 20 ரூபாய்னு விற்பனையாகுது. இதுல 24 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். இதோட தட்டை, மாடுகளுக்குத் தீவனமா பயன்படும். இதை 5 ஆயிரம் ரூபாய்க்கு வித்துடுவேன். மொத்தம் 29 ஆயிரம் ரூபாய் வருமானம். எல்லா செலவும் போக, 20 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்'' என்றார்.
குளிருக்கு ஏற்ற செந்தினை!
பக்கத்து கிராமமான மேல்நெல்லிமரத்தூர் கிராமத்தில் செந்தினை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், கோவிந்தராஜ். இவரிடம் பேசியபோது, ''அப்பா காலத்துல கமலையில தண்ணீர் இறைச்சு, கொஞ்சமா வீட்டுத் தேவைக்கு மட்டும் நெல் போட்டுக்குவோம். மீதி நிலத்துல மானாவாரி விவசாயம்தான். நான் விவசாயத்துக்கு வந்த பிறகு, ஆயில் மோட்டார் போட்டேன். இப்ப கரன்ட் மோட்டாருக்கு மாறின பிறகு, நெல், மல்பெரி, கெர்கின்ஸ் வெள்ளரினு சாகுபடியை மாத்திக்கிட்டு, பட்டுப்புழு வளர்ப்புலயும் இறங்கினேன். இந்த சமயத்துல உடம்பு கொஞ்சம் கெட்டுப்போய் டாக்டர்கிட்ட காட்டினப்போ... 'சாப்பாட்டாலதான் உங்க உடம்புல பிரச்னை’னு சொன்னார். அதனாலதான், திரும்பவும் நம்மோட பாரம்பரிய சாமை, கேழ்வரகு, தினை மாதிரியான தானியங்களைச் சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்.
சாமை, கேழ்வரகு, தினை மூணையும் நானே சாகுபடி பண்றேன். 6 ஏக்கர் 80 சென்ட் நிலம் இருக்கு. 3 ஏக்கர்ல மா இருக்கு. இதுக்கு ஊடுபயிரா சாமை இருக்கு. 2 ஏக்கர்ல நெல் இருக்கு. 1 ஏக்கர்ல கெர்கின்ஸ் இருக்கு. 30 சென்ட்ல கேழ்வரகு, 25 சென்ட்ல சாமை செந்தினை போட்டிருக்கேன். 25 சென்ட்ல வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை சாகுபடி செய்றேன். இந்திய வேளாண் அறிவியல் மையத்திலிருந்து சீரகச்சம்பா, மடுமுழுங்கி, வரப்புக்குடைஞ்சான் நெல் ரகங்களோட விதை கொடுத்தாங்க. போன வருஷம் சீரகச்சம்பா சாகுபடி செஞ்சதுல நல்ல விளைச்சல்.
செந்தினையை ஆவணியில விதைக்கலாம். 110 நாள்ல அறுவடைக்கு வந்துடும். 10 சென்ட்ல 350 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோ 20 ரூபாய்னு விற்பனையாகுது. செந்தினை அரிசியில மாவு இடிச்சு சாமிக்கு படைப்பாங்க. இது கொஞ்சம் சூட்டைக் கிளப்பற தானியம்கிறதால, குளிர்காலத்துல கஞ்சி வெச்சுக் குடிப்போம்'' என்றார்.
60 நாளில் விளையும் பனிவரகு!
சேராமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி, பனிவரகு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். ''மூணரை ஏக்கர்ல விவசாயம் இருக்கு. ஒவ்வொரு வருஷமும் மானாவாரியா, சாமை, கேழ்வரகு, பனிவரகு மூணையும் சாகுபடி செய்றேன். 60 நாள்ல பனிவரகு விளைஞ்சுடும். வைகாசிப் பட்டத்துல விதைச்சுவிட்டா... கிடைக்கிற மழையில தானே விளைஞ்சு வந்துடும். பெருசா பராமரிக்கத் தேவையில்ல. ஆடியில அறுவடை செஞ்சுட்டு, சாமையை விதைக்கலாம். இப்போ மழை குறைவா இருக்கிறதால, ரெண்டு வருஷமா பனிவரகையும் ஆடிப்பட்டத்துலதான் விதைக்கிறேன். இந்த வருஷம் வீட்டுத் தேவைக்காக மட்டும் 5 சென்ட் நிலத்துல பனிவரகு விதைச்சிருக்கேன். இதை அறுத்து அடிச்சா... 80 கிலோ வரை கிடைக்கும். இதை அடை செஞ்சு சாப்பிடுவோம்'' என்றார்.
ஆனி விதைப்பு... ஆடி முளைப்பு!
ஜவ்வாது மலை விவசாயிகளுக்கு பலவிதமான பாரம்பரிய விதைகளை வழங்கி வருகிறது, இங்கு செயல்பட்டுவரும் இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையத்தின் கிளை. இதன் திட்ட அலுவலர் ராகுலிடம் பேசியபோது, ''ஜவ்வாது மலையில் இருக்கும் விவசாயிகள் 90 சதவிகிதம் சாமையைத்தான் சாகுபடி செய்கிறார் கள். சாமையில்... சிட்டஞ்சாமை 3 மாதப்பயிர். பெருஞ்சாமை (வெள்ளைச்சாமை) 6 மாதப்பயிர். சிட்டஞ்சாமைக்கு 'ஆனி விதைப்பு, ஆடி முளைப்பு’ என்று சொல்வார்கள். பருவ மாறுபாடுகளால் சிட்டஞ்சாமையை விதைக்க முடியாமல் போனால், புரட்டாசி மாதத்தில் பெருஞ்சாமையை விதைப்பார்கள்.
பனி வரகை வைகாசி மாதத்தில் கிடைக்கும் மழையைப் பொறுத்து விதைப்பார்கள். அந்த ஈரப் பதத்திலேயே அது வளர்ந்து 2 மாதங்களில் மகசூல் கொடுத்துவிடும். தினையில் பலவகையான பாரம்பரிய ரகங்கள் இருக்கின்றன. அதில் செந்தினையும் ஒன்று. இது அழியும் நிலையில் இருக்கிறது. ஒரு விவசாயியிடம் இருந்த செந்தினை விதைகளை வாங்கி, சில விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிறோம்'' என்ற ராகுல்,
''இந்தப் பகுதியில் விவசாயிகளை ஒருங்கிணைத்து 'வேளாண் வழிகாட்டி மையம்’ ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இந்த மையம் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான விதைகளைக் கொடுத்து வருகிறோம். ஒரு பங்கு விதை கொடுத்தால்... இரண்டு பங்காகத் திருப்பி கொடுக்க வேண்டும். வெளியூர் விவசாயிகளாக இருந்தால், ஒரு கிலோ விதை 30 ரூபாய் என்று விற்பனை செய் கிறோம். தற்போது, எங்கள் மையத்தில் சாமையில் இரண்டு ரகங்கள், தினையில் ஏழு ரகங்கள், கேழ்வரகில் மூன்று ரகங்கள், பனிவரகில் ஒரு ரகம், குதிரைவாலியில் ஒரு ரகம், வரகில் ஒரு ரகம் என விதைகள் இருப்பு வைத்துள்ளோம். தேவைப்படும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்'' என்றார்.
தொடர்புக்கு,
கிருஷ்ணா செல்போன்: 97876-43683.
கோவிந்தராஜ், செல்போன்: 97863-72403.
ராகுல், செல்போன்: 99427-96314.
கிருஷ்ணா செல்போன்: 97876-43683.
கோவிந்தராஜ், செல்போன்: 97863-72403.
ராகுல், செல்போன்: 99427-96314.